மதுரையில் ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு!
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், மதுரையில் வரும் ஜூன் 1ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும்,போப் ஆண்டவர்க்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு" என்ற தலைப்பில் நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்து 1244 இடங்களில் திமுக மாநிலம் தழுவிய பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
அதே போல் அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதை விடவும், மற்ற மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிட வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி வார்டு வாரியாக செல்ல வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். மேலும் மதுரையில் ஜூன் 1ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் திமுக.,வின் இந்த பொதுக்குழு கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.