அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரிக்கட்சியாக இருக்கக்கூட தகுதியில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் கொளத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
இன்றைக்கு நாம் எங்கு சென்றாலும் எஸ்ஐஆர் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அதைப் பேசாமல் இருக்க முடியாது என்கிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எஸ்ஐஆர். நடவடிக்கைக்கு ஆதரவாக கூச்சமே இல்லாமல் உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது அதிமுக. கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு எஸ்ஐஆர் தொடர்பான நிபந்தனைகளை அதிமுக ஏற்றுக் கொண்டுள்ளது. எஸ்ஐஆர்ஐ எதிர்த்து நான் நீதிமன்றம் சென்றால், அதிமுக ஆதரித்து நீதிமன்றம் செல்கிறது. இது வெட்கக்கேடான செயல். மக்களை சந்திக்க தெம்பு இன்றி குறுக்கு வழியை நாடியுள்ளனர். இப்படி போய்க்கொண்டிருந்தால் அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரிக்கட்சியாக இருக்கக்கூட தகுதியில்லை.
தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது. இதற்காக நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் செயல்பட்டு வருகிறோம். தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் எஸ்ஐஆர். நடவடிக்கைகளை தொடங்கி 10 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. நமக்கு நேரம் குறைவாக இருக்கிறது. எனவே, மக்களுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே இருந்து பொதுமக்களின் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டிய கடமை திமுகவிற்கு இருக்கிறது. எஸ்ஐஆர் படிவங்களை பொதுமக்கள் நிரப்புவதற்கு திமுக பாக முகவர்கள் உதவி செய்ய வேண்டும்.
மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் இந்திய குடிமக்கள்தான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையம், அப்படியான சுமையை நம் மீது சுமத்தியிருக்கிறது. இதற்கு மூலக்காரணமாக மத்திய பாஜகவினர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டைத் தொடர்ந்து மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் எஸ்ஐஆர்-க்கு எதிரான நிலைப்பாட்டை அந்த மாநில அரசுகள் உறுதி செய்துள்ளன. கேரளாவில் எதிர்க்கட்சியும் எஸ்ஐஆர்-க்கு எதிராக போராடி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.