பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் பழனிச்சாமியின் வேலையாக இருக்கிறது: முதல்வர் தாக்கு!

Manjula Devi
May 14, 2025,05:44 PM IST

ஊட்டி:100 நாள் வேலை திட்டத்திற்கும், மெட்ரோவுக்கும், நான் சொல்லித்தான் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி வருகிறார். இந்த மாதிரி பொய் பித்தலாட்டத்தை சொல்வது தான் பழனிச்சாமியின் வேலையாக இருக்கிறது. இதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் என முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.


அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சியை தொடங்கி வைக்கவும், அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும் ஐந்து நாள் பயணமாக ஊட்டி சென்றுள்ளார் முதல்வர் மு க ஸ்டாலின். இந்த நிலையில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மனைவி துர்கா ஸ்டாலின் ஊட்டியில் திறந்தவெளி மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, 




கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போதே திமுக ஆட்சிக்கு வந்ததும், பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் நிச்சயம் உறுதியாக தண்டிக்கப்படுவார்கள் என்று பேசி இருந்தேன். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. சமீபத்தில் சட்டமன்ற கூட்டத்தில் கூட பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சாட்சி என கூறியிருக்கிறேன்.

அதேபோல் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அதற்கும் உரிய தண்டனை வழங்கப்படும்.


ஆனால் எடப்பாடி பழனிச்சாமி உடனே நான்தான் இதற்கு காரணம் என சொல்லிக் கொண்டிருக்கிறார். அதேபோல் அமித்ஷாவை போய் பார்த்தார்‌. ஏன் பார்த்தார் எதற்காக பார்த்தார் என்று நாட்டுக்கே தெரியும். ஆனால் 100 நாள் வேலை திட்டத்திற்கும், மெட்ரோவுக்கும், நான் சொல்லித்தான் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி வருகிறார். இந்த மாதிரி பொய் பித்தலாட்டத்தை சொல்வது தான் பழனிச்சாமியின் வேலையாக இருக்கிறது. இதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். 


அதிமுக ஆட்சியில் விளையாட்டு துறை அமைச்சர் என்றால் யார் என்று தெரியாது; ஆனால் இப்போது தெரியும். வெளிநாட்டவர்களும் வந்து பங்கேற்கும் வகையில் வளர்ச்சி கண்டிருக்கிறது. விளையாட்டு துறையில் நிறைய  மடல்களும், அவார்டுகளும், வாங்கப்பட்டு வருகிறது என பேசினார்.