முக ஸ்டாலின் நிலைப்பாடு மாறிவிட்டது... நம்ப வைத்து கழுத்து அறுத்துவிட்டார்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
சென்னை: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என நம்ப வைத்து மு.க.ஸ்டாலின் கழுத்து அறுத்துவிட்டார் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சமூகநீதி பேரவை சார்பில் ஆனைமுத்து நூற்றாண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர் என்ற அடிப்படையில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது தவறு. 7 சதவீத மக்கள் தொகை கொண்ட உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 0.5 சதவீத பேருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், வன்னிய சமுதாய மக்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தால் அது ரத்து செய்யப்படுகிறது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தருவோம் என நம்ப வைத்து முதலமைச்சர் கழுத்தறுத்து விட்டார்.
இட ஒதுக்கீடு தொடர்பாக திரும்பத் திரும்ப வந்து தொந்தரவு செய்ய வேண்டாம் என முதலமைச்சர் கூறினார். பின் தங்கிய மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது. தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மதுவுக்கு அடிமையாக்கப்பட்டு இருக்கிறார்கள். பின் தங்கிய சமூக இளைஞர்களுக்கு நல்ல படிப்பும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அதற்கு முறையாக கணக்கெடுப்பு வேண்டும்.
என்னுடைய மனதில் சமூக நீதி வெறி உள்ளது. அதற்கு காரணம் என்னுடைய தந்தை டாக்டர் ராமதாஸ். அவரைப் பார்த்து பார்த்து தான் நான் வளர்ந்தேன். சமூக நீதியை டாக்டர் ராமதாஸ் இடமிருந்து தான் நான் கற்றுக் கொண்டேன். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு எடுக்க வேண்டும். ஒரு மாநில அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கலாம். கர்நாடகா, பீகார்,ஒடிசா போன்ற மாநிலங்கள் அவ்வாறு கணக்கெடுப்பை எடுத்துள்ளன.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் உரிமை மாநில அரசுக்கு இல்லை மத்திய அரசுக்கு தான் உள்ளது என முதலமைச்சர் பேசுவது பொய். மாநில உரிமை என பேசும் முதலமைச்சர் மற்ற விஷயங்களுக்கு எல்லாம் மத்திய அரசை எதிர்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு மட்டும் தயங்குவது ஏன் இது வன்னியர் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. சமூக நீதி பிரச்சனை என்று தெரிவித்துள்ளார்.