தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை, பாஜக உணர வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டத்திற்கு முழுமையாக மத்திய அரசு நிதி அளித்து வந்த நிலையில், தற்பொழுது புதிய சட்டத் திருத்தத்தில் மாநில அரசு 40 சதவீதம் நிதி வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மேலும், காந்தியடிகளின் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பாஜக அரசையும், அதிமுகவையும் கண்டித்து தமிழகம் முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
MGNREGA-வை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக் கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள்!.
இது தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை, அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் மத்திய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்! ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.