மும்மொழி கொள்கையை வைத்தே.. 2026 தேர்தலை சந்திக்க வேண்டும்..பாஜகவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்!
சென்னை: வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மும்மொழிக் கொள்கையை வைத்தே தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக கட்சியினருக்கு சவால் விடுகிறேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை எனப்படும் இந்தி திணிப்புக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகள் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வருகிறது. இதற்காக தமிழக அரசும் பல்வேறு வழிகளில் போராடி வருகிறது. மாணவரணி சார்பில் போராட்டம், கையெழுத்து இயக்கம், பெயர் பலகையில் இருக்கும் இந்தி வாக்கியங்களை அழிப்பது என பல்வேறு வகையில் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழக அரசு தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. அதே சமயத்தில் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளும் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே பாஜகவினர் மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்குவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் நான் இருமொழி கொள்கை தான் என்று சொன்னேன். பாஜகவினர் வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவரை கட்சிகளிலிருந்து நீக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பள்ளி மாணவர்களை மும்மொழிக் கல்வி கொள்கைக்கு ஆதரவு அளிக்க கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி வருவதாகவும்க கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், பாஜக தமிழ்நாட்டில் மும்மொழிக்கு ஆதரவாக கையெழுத்து பிரசாரம் நடத்துவது நகைப்புக்குரிய விஷயமாகிவிட்டது. இதை பிரதான வாக்குறுதியாக வைத்து 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளுமாறு அவர்களுக்கு நான் சவால் விடுகிறேன். அதுவே ஹிந்தி திணிப்புக்கு எதிரான பொது வாக்கெடுப்பாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.