மருத்துவமனையில் இருந்தபடியே.. கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Su.tha Arivalagan
Jul 23, 2025,06:47 PM IST

சென்னை: மருத்துவமனையில் ஓய்வில் இருந்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் உரையாடினார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கிங்  போனபோது ஏற்பட்ட தலை சுற்றல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதன் அடிப்படையில் அவர் 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.


இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். நேற்று இதுகுறித்து அவர் டிவீட் ஒன்றையும் போட்டார். அதில்,  மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைக் கவனித்து வருவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஒரு வீடியோவைப் போட்டுள்ளார்.




அதில், மருத்துவமனையில் இருந்தபடியே உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன். மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.