முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருப்பதாகவும், இன்னும் 2 நாளில் அவர் வழக்கமான பணிகளைப் பார்ப்பார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தலைசுற்றல் பிரச்சினை காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து அவர் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் ஓய்வில் இருந்து வருகிறார்.
மருத்துவமனையில் இருந்தபடியே அவர் தனது அரசுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலெக்டர்களுடனும் அவர் கலந்துரையாடினார். இந்த நிலையில் முதல்வரின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஏற்பட்ட தலைச்சுற்றல் பிரச்சனை தொடர்பாக கிரீம் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலை சுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.
இதய சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஜி செங்குட்டு வேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுனர் குழுவின் அறிவுரையின்படி இதனை சரி செய்வதற்கான சிகிச்சை முறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது.
இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. மாண்புமிகு முதல்வர் நலமாக உள்ளார்கள். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.