நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்.. ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். இதன் கீழ் தமிழ்நாடு முழுவதும் 1,256 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், ஏழை எளிய மக்களும், மாற்றுத்திறனாளிகளும் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள முடியும்.
சென்னையில், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) மற்றும் ஃபேட்டி லிவர் நோய் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்த பின்னர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இதனைத் தெரிவித்தார். இம்முகாம்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நிபுணர் மருத்துவர்கள் பங்கேற்பர் என்றும் அவர் கூறினார்.
இம்முகாம்களில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஊனத்தின் சதவிகிதத்தைக் குறிப்பிடும் சான்றிதழ்களையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அட்டைகளையும் பெறலாம். மேலும், இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் நடைபெறவுள்ள இம்முகாம்களில் புற்றுநோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
மருத்துவ பரிசோதனை தேவைப்படுபவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் வசிப்பிடங்களுக்கு மிக அண்மையிலேயே விரிவான மருத்துவப் பரிசோதனைகள் வழங்கும் நோக்குடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில்தான் தமிழ்நாடு அரசு, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைத் தொடங்கியது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அது போலவே, ஆகஸ்ட் 2ம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். இதுவரை துவங்கப்பட்டுள்ள மருத்துவ திட்டங்களிலேயே இது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும், சென்னையில் மட்டும் 400 இடங்களில் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.