5 நாள் பயணமாக இன்று ஊட்டிக்கு புறப்பட்டார்.. முதல்வர் மு க ஸ்டாலின்..!
ஊட்டி: அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் மலர் கண்காட்சியை தொடக்கி வைக்க, ஐந்து நாள் சுற்றுப்பயணமாக தற்போது ஊட்டிக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கி, வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குளுமையான சூழ்நிலையை அனுபவிக்க உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர் மக்கள் ஏராளமானோர் ஊட்டிகைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதே சமயத்தில் வருடந்தோறும் அங்கு நடைபெறும் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்கவும் ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர்க் கண்காட்சி வரும் மே 15 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த மலர்க் கண்காட்சி மே 25ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெறும். இந்த மலர் மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க ஸ்டாலின் மே 15ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
இதற்காக முதல்வர் மு. க ஸ்டாலின், 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ஊட்டிக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளார். அதன்படி, தற்போது ஊட்டிக்கு புறப்பட்டார் முதல்வர் மு க ஸ்டாலின். சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை சென்று, பின்னர் கார் முலம் சாலை மார்க்கமாக ஊட்டிக்கு செல்ல இருக்கிறார்.அங்கு முதல்வருக்கு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.தொடர்ந்து ஊட்டியில் உள்ள அரசினர் மாளிகையில் தங்குவார். இதனையடுத்து பட்டா வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, பழங்குடியின மக்களுடன் சந்தித்து பேச இருக்கிறார்.
இதனை தொடர்ந்து 15ஆம் தேதி அரசு தாவரவியல் பூங்கா மலர்க்கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். பின்னர் 16ஆம் தேதி ஐந்து நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் ஊட்டி வருகையை முன்னிட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.