திருச்சிக்கான புதிய பேருந்து நிலையம்.. பஞ்சப்பூரில் பிரம்மாண்டம்.. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

Su.tha Arivalagan
May 09, 2025,05:07 PM IST

திருச்சி: திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பஞ்சப்பூரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் (Integrated Bus Terminus - IBT) இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. 


40.60 ஏக்கர் பரப்பளவில்,ரூ.  492.55 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் நவீன வசதிகள் உள்ளன. இது பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர பேருந்துகள், நகரப் பேருந்துகள் என அனைத்து வகையான பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படும். கடைகள், உணவகங்கள், ஏடிஎம் வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள், பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்தும் உள்ளன.


திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் இந்த புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இது திருச்சியின் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தும். நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் போலவே இந்த பஞ்சப்பூர் பஸ் நிலையமும் பார்க்க சூப்பராக இருக்கிறது.


என்னெல்லாம் வசதி இருக்கு பாருங்க




- மொத்தம் 401 பேருந்து நிறுத்தும் இடங்கள் உள்ளன.

- 141 இடங்கள் நீண்ட தூர பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

- 84 இடங்கள் குறுகிய தூர பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

- 120 இடங்கள் வெளியூர் செல்லும் பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது (mofussil buses).

- 56 இடங்கள் நகரப் பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.


நீண்ட தூர பேருந்துகள் தரை தளத்தில் இருந்து இயக்கப்படும். நகரப் பேருந்துகள் முதல் தளத்தில் இருந்து இயக்கப்படும்.


ஒவ்வொரு நடைமேடையிலும் (platform) LED திரை மற்றும் ஒலிபெருக்கி வசதி உள்ளது. பேருந்து புறப்படும் நேரம், வரும் நேரம் போன்ற தகவல்களை இதில் தெரிந்து கொள்ளலாம். பயணிகள் உட்கார இடங்கள், குடிநீர் வசதி மற்றும் கடைகள் உள்ளன.


பயணிகள் வசதிக்காக பல கடைகள், உணவகங்கள் உள்ளன. சுமார் 800 பேர் வரை காத்திருக்கலாம். குடிநீர் வசதி எல்லா இடத்திலும் உள்ளது. ஐந்து ஏடிஎம் இயந்திரங்கள், 78 கடைகள், இரண்டு உணவகங்கள் உள்ளன. பேருந்து நேரம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள 50 LED திரைகள் வைக்கப்பட்டுள்ளன.


டிக்கெட் கவுண்டர், உடைமைகளை பாதுகாப்பாக வைக்கும் அறை (cloak room), பாதுகாவலர் அறை, பயணிகள் ஓய்வு அறை, பேருந்து ஊழியர்களுக்கான ஓய்வு அறைகள் தரை தளத்தில் உள்ளன.


மாற்றுத்திறனாளி பயணிகளுக்காக சக்கர நாற்காலி வசதி உள்ளது. வயதானவர்களுக்காக பேட்டரி கார் வசதி உள்ளது. முதல் தளத்திற்கு செல்ல ஆறு லிஃப்ட், ஆறு எஸ்கலேட்டர் மற்றும் படிக்கட்டுகள் உள்ளன.


திருநங்கையர் - மாற்றுத் திறனாளிகள் -ஆண்கள் - பெண்கள் கழிப்பறைகள்




ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தனித்தனியாக கழிப்பறைகள் உள்ளன. ஆண்கள் பயன்படுத்த 52 கழிப்பறைகள், பெண்கள் பயன்படுத்த 81 கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த நான்கு கழிப்பறைகள், திருநங்கைகள் பயன்படுத்த இரண்டு கழிப்பறைகள் உள்ளன. மேலும் 173 சிறுநீர் கழிப்பிடங்கள் மற்றும் 21 குளியலறைகள் உள்ளன.


பாதுகாப்புக்காக 166 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தீயணைப்பு கருவிகள், பாதுகாப்பு அறை மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை ஆகியவை உள்ளன.


வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி உள்ளது. 216 கார்கள், 1,935 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 100 ஆட்டோக்கள் நிறுத்தலாம். இலவச வைஃபை (free wifi) மற்றும் மொபைல் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.


லாரி ஓட்டுநர்களுக்காக ஒரு முனையமும் (truck terminal) அமைக்கப்பட்டுள்ளது. இது IBT அருகில் 29 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் தங்கும் அறைகள், கேன்டீன், கழிப்பறைகள், குளியலறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளன. கடைகள் வைக்க வணிக இடமும் உள்ளது.


ராணுவத்துக்கு சல்யூட் வைத்த முதல்வர் ஸ்டாலின்



திருச்சியில் இன்று நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பஞ்சப்பூர் பஸ் நிலையத்தைத் தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்,


விழாவின்போது நாட்டைக் காக்கும் பெரும் பணியில் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள நமது படையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சல்யூட் அடித்து மரியாதை செய்தார். அவருடன் விழாவில் கலந்து கொண்டவர்களும் எழுந்து நின்று சல்யூட் வைத்து ராணுவத்துக்கு மரியாதை செய்தனர்.