இலங்கை படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், நேற்று இலங்ககை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ள வலிழுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக் கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் ஆக. 6ம் தேதி அன்று அதிகாலை 14 இந்திய மீனவர்கள், அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகு மற்றும் ஒரு பதிவு செய்யப்படாத நாட்டுப் படகுடன் சிறை பிடிக்கப்பட்டனர். இலங்கைக் கடற்கரையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தூதரகரீதியாக தலையிட வேண்டும் என்று நான் பல முறை வேண்டுகோள் விடுத்த போதிலும், இதுபோன்ற கைது சம்பங்கள் தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது.
2025 ஆம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற கைது சம்பவங்களில், இது 17வது சம்பவம். தற்போது 237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் இருப்பதால் மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமான பாரம்பரிய நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்துள்ளனர் என்பதை வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே, கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுத்திடுமாறு
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.