நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: நெல்லை தொகுதியில் தோற்றால் திமுக நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என்று நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதானல் அனைத்து கட்சிகளும் தத்தமது தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், திமுக தரப்பில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உடன் பிறப்பே வா என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு தொகுதியாக திமுக நிர்வாகிகளுடன் சந்தித்து பேசி வருகிறார்.
இதுவரைக்கும் 33 நாட்களில் 73 சட்டசபைத் தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் நேரடியாக ஆலோசனை நடத்தி முடித்திருக்கிறார். இந்த கூட்டத்தின் போது அந்தந்த தொகுதிகளின் நிலவரம் என்ன?. அரசு திட்டங்கள் அவர்களுக்கு சேர்கின்றதா? இல்லையா? உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், நெல்லை சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
அப்போது, 2026 நெல்லை தொகுதியில் தோல்வி அடைந்தால் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அனைவரது பதவிகளும் பறிக்கப்படும். 2026 சட்டமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.