கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!

Meenakshi
Oct 15, 2025,05:24 PM IST

சென்னை: முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டசபையில் இன்று 2ம் நாள் கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணித்து வருகை தந்திருந்தனர். கரூர் சம்பவம் குறித்து முதல்வர் விளக்கம் அளித்து பேசி வந்தார். அப்போது எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பேசுகையில், ஒரே இரவில் 39 சடலங்களுக்கு உடற்கூராய்வு எவ்வாறு நடத்தப்பட்டது. ஏன் இவ்வளவு அவசரம். கள்ளக்குறிச்சியில் சென்று கள்ளச்சாராயத்தில் பலியான நபர்களின் குடும்பங்களை பார்க்காத ஸ்டாலின். இங்கு மட்டும் ஏன் சென்றார். அமைச்சர்கள் அங்கு செல்லாத போது இங்கு மட்டும் அமைச்சர்கள் செல்வது ஏன்?




கரூர் விவகாரத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் அசம்பாவிதத்தை தடுத்திருக்கலாம். தவெக தலைவர் 4 மாவட்டங்களில் ஏற்கனவே மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தினார்கள். மக்கள் எவ்வளவு பேர் பங்கேற்றார்கள் என அரசுக்கு, உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்திருக்கும். அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுத்திருந்தால், அசம்பாவிதத்தைத் தவிர்த்திருக்கலாம்.


இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கட்சிக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் கிடையாது. உங்கள் ஆட்சியில் தான் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி வேலுச்சாமிபுரத்தில் அதிமுக கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டபோது, அதே பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. என்று கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பல கேள்விகளை எழுப்பினார்.