கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!

Su.tha Arivalagan
Jun 16, 2026,12:08 PM IST
சென்னை: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையிலும் தமிழக அரசு ஒரு மிக முக்கிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில், கடன் தள்ளுபடி வரம்பு தற்போது கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 25-ஆம் தேதி தமிழக அரசு தரப்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்குக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் பெரும் கண்டனங்கள் தெரிவித்திருந்தனர். 

இது விவசாயிகளை ஏமாற்றும் வேலை என கூறி, பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யும் படி வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, இந்த தள்ளுபடி வரம்பை மேலும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.



இன்று தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்குக் கடன் தொகை முழுமையாகத் தள்ளுபடி (முழு தள்ளுபடி) செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னதாக அறிவிக்கப்பட்ட ரூ.50,000 என்ற வரம்பு, தற்போது மேலும் ரூ.25,000 உயர்த்தப்பட்டு ஒட்டுமொத்தமாக ரூ.75,000 ஆக மாற்றப்பட்டுள்ளது.

அரசின் இந்த திடீர் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பால் தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் நேரடியாகப் பயனடைவார்கள். கடந்த சில காலங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றம், உர விலை உயர்வு மற்றும் இதர விவசாயச் செலவுகளால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வந்த விவசாயிகளுக்கு, முதலமைச்சரின் இந்த அறிவிப்பு ஒரு மிகப்பெரிய நிம்மதியையும் மறுவாழ்வையும் அளித்துள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை மூலம் மாநிலத்தின் விவசாய உற்பத்தித் திறன் அதிகரிப்பதோடு, விவசாயிகள் புதிய உற்சாகத்துடன் தங்களின் அடுத்தகட்ட வேளாண் பணிகளைத் தொடங்க வழிவகுக்கும்.தமிழக அரசின் இந்த விவசாயி நலன் சார்ந்த பெருந்தன்மையான முடிவிற்குப் பல்வேறு விவசாய சங்கங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். 

இத்திட்டம் குறித்த கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகுதி வாய்ந்த பயனாளிகளின் பட்டியல் விரைவில் கூட்டுறவுத்துறை மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.