முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனைவி சங்கீதா தெரிவித்ததை அடுத்து, இந்த வழக்கை முடித்து வைப்பதாக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா, செங்கல்பட்டு விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இது தமிழக அரசியலிலும், சினிமா துறையிலும் பெறும் பரபரப்பு மற்றும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரால் ஆஜராகாத விஜய்:
இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முதலமைச்சர் விஜய் நேரில் ஆஜராகவில்லை. தற்போது தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதாலும், அதில் முதல்வர் பங்கேற்றுள்ளதாலும் அவரால் நேரில் வர இயலவில்லை என்று விஜய் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்து விளக்கம் அளித்தார்.
வழக்கின் பின்னணி விவரங்கள்:
முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில், விவாகரத்துடன் சேர்த்து ஜீவனாம்சம் மற்றும் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தொடர்ந்து வசிப்பதற்கான உரிமை ஆகியவற்றையும் அவர் கோரியுள்ளார்.
முன்னதாக, இருவருமே சமூகத்தில் முக்கியப் பிரபலங்களாக இருப்பதாலும், பாதுகாப்பு காரணங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் நெருக்கடிகளைத் தவிர்க்கவும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து, காணொலி வாயிலாகப் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என இரு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
கடந்த ஜூன் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையைத் தொடர்வதற்கு முன்பாக இருவரையும் சமரச மையத்திற்கு (Mediation Centre) அனுப்பிப் பேசுவது குறித்து அறிவுறுத்தி, விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்திருந்தது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது முதலில் பகல் 12 மணிக்கும், பிறகு 02.30 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமான தனது கணவரும், முதல்வருமான விஜய் மீதான விவாகரத்து வழக்கை திரும்பப் பெறுவதாக சங்கீதா கோர்ட்டில் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கை முடித்து வைப்பதாக கோர்ட் அறிவித்துள்ளது.