விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!
சென்னை: கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதல்வர் சி ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் குறு மற்றும் சிறு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாக (100%) தள்ளுபடி செய்யப்படவுள்ளன.
இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் வி. காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் என். மரிய வில்சன் மற்றும் துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 28.11.2025 தேதியிட்ட வழிகாட்டுதலின்படி, கடன் தள்ளுபடித் திட்டங்களுக்கான தொகையை அரசே 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாகச் செலுத்த வேண்டும். இந்த விதிமுறையையும், தற்போதைய மாநில அரசின் நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்களையும் கவனத்தில் கொண்டு, விவசாயிகளின் நலனைக் கருதி இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இக்கடன் தள்ளுபடி திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
1.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு மட்டுமே இந்தத் தள்ளுபடி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கும் தலா ரூ. 5,000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 14,22,555 விவசாயிகள் நேரடியாகப் பயனடைவார்கள்.
இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.2,044.46 கோடி செலவினம் ஏற்படும்.
இந்த அதிரடிப் பயிர்க்கடன் தள்ளுபடியானது, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்குப் புதிய கடன்களைப் பெற்று விவசாயத்தை மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்குப் பெருமளவில் உறுதுணையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.