தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டசபை கூடியது.. உளமார உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்
சென்னை: 17வது சட்டசபை இன்று கூடியது. முதல் முறையாக இன்று கூடிய சட்டசபைக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமை தாங்கினார். அவரது உரைக்குப் பின்னர் உறுப்பினர்கள் பதவியேற்பு நடைபெற்று வருகிறது.
முதல் ஆளாக முதல்வர் சி. ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். உளமார என்று கூறி அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.
இதைத் தொடர்ந்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து அதிமுக கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
எடப்பாடி பழனிச்சாமிக்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுப்பினராக பதவியேற்றார். அவர் முதல்வர் ஜோசப் விஜய்க்கு வணக்கம் வைத்து விட்டு பின்னர் உறுதிமொழியை வாசித்தார்.
முன்னதாக, இன்று காலை சரியாக 9.30 மணிக்கு சட்டமன்றம் கூடியது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்துள்ளார். அவர் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, மீதமுள்ள 233 உறுப்பினர்கள் இன்று முறைப்படி சட்டமன்றத்தில் பதவியேற்கின்றனர்.
வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களும் தங்களது வெற்றிச் சான்றிதழை (Winning Certificate) கட்டாயம் கையோடு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதன்படி உறுதிமொழி ஏற்புக்கு முன்னதாக சான்றிதழைக் கொடுத்த பிறகு அவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல்
பதவியேற்பு நிகழ்வுகள் நிறைவடைந்த பிறகு, சட்டமன்றத்தின் அடுத்த முக்கியப் பணியாக புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான நடைமுறைகள் முறைப்படி அறிவிக்கப்பட்டு, வாக்கெடுப்பு அல்லது ஒருமனதான தேர்வு மூலம் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் சென்னை தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த புதிய முகங்கள் சட்டமன்றத்தில் கால் பதிப்பதைக் காண பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.