காஸ் ஆட்டோக்களுக்கு சிக்கல்.. காஸ் நிரப்ப நீண்ட க்யூவில் காத்திருப்பபு.. பயணிகளும் பாதிப்பு

Su.tha Arivalagan
Mar 12, 2026,11:07 AM IST

சென்னை: ஹோட்டல் சமையலறைகளைத் தொடர்ந்து, தற்போது சென்னையின் போக்குவரத்தும் கூட பாதிப்பை சந்திக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இயற்கை எரிவாயு மற்றும் எல்பிஜி காஸ்களில் இயங்கும் ஆட்டோக்கள் சிக்கலை சந்திக்க ஆரம்பித்துள்ளன.


சென்னையில் உள்ள பல எரிவாயு நிலையங்கள் எரிபொருள் தட்டுப்பாட்டால் மூடப்படும் நிலையில் உள்ளன. பல பகுதிகளில் எரிபொருள் நிரப்ப ஆட்டோ ஓட்டுநர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


ஆட்டோக்களுக்கான ஒரு கிலோ எல்பிஜி அதிகாரப்பூர்வமாக ரூ. 59.41 என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், சில தனியார் நிலையங்களில் 70 முதல் ரூ 80 வரை விற்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களின் நிலையங்களிலும் விலை ரூ. 64.51 ஆக உயர்ந்துள்ளது.




சிஎன்ஜி கிடைக்காததால், பல ஓட்டுநர்கள் பெட்ரோலுக்கு மாறியுள்ளனர். ஆனால் பெட்ரோல் விலை அதிகம் என்பதோடு மைலேஜும் குறைவு என்பதால் அவர்களின் வருமானம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சுமையை பயணிகள் மீது ஏற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.


பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்துள்ளனராம். உதாரணமாக, எழும்பூர் முதல் சென்ட்ரல் வரை செல்ல வழக்கத்தை விட ரூ. 40 கூடுதலாகக் கேட்கிறார்களாம். ஐயப்பன்தாங்கல் முதல் கோயம்பேடு வரை 130 ஆக இருந்த கட்டணம் தற்போது 180 ஆக உயர்ந்துள்ளது.


எரிபொருள் விலை தட்டுப்பாடு காரணமாக கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாதது என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. சுமார் 25% எரிவாயு ஆட்டோக்கள் எரிபொருள் கிடைக்காமல் முடங்கியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


கிண்டி, சின்னலைஉள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில தனியார் எரிவாயு நிலையங்கள் போதிய விநியோகம் இல்லாததால் மூடப்பட்டுள்ளன. வழக்கமாக 3 லோடு வரும் நிலையங்களுக்கு இப்போது ஒரு லோடு மட்டுமே வருவதாக நிலைய மேலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


சென்னையில் சுமார் 40,000 எல்பிஜி ஆட்டோக்களும், 20,000 சிஎன்ஜி ஆட்டோக்களும் ஓடும் நிலையில், எரிவாயு நிலையங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் இந்த நெருக்கடிக்கு ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.