ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

Su.tha Arivalagan
Jun 29, 2026,04:33 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம், மாதாந்திர பால் அட்டை வைத்துள்ள நுகர்வோருக்கு வழங்கி வந்த சிறப்புச் சலுகையை ரத்து செய்வதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாவட்டத்திலுள்ள ஆவின் பால் நுகர்வோர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரூ.2 தள்ளுபடி சலுகை நிறுத்தம்:

கோவை மாவட்ட ஆவின் நிர்வாகத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாதாந்திர பால் அட்டைகளைப் பெற்று, தினசரி தேவைகளுக்கான பாலை தள்ளுபடி விலையில் வாங்கி வந்தனர். இதுவரை மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு தலா 2 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த 2 ரூபாய் தள்ளுபடி சலுகை முற்றிலும் நிறுத்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


ஜூலை 1 முதல் அமல்:




இந்த புதிய உத்தரவானது வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி (01.07.2026) முதல் தடையின்றி அமலுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக, மாதாந்திர பால் அட்டை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கும் இனி சில்லறை விற்பனை விலையிலேயே (MRP - Maximum Retail Price) பால் விற்பனை செய்யப்படும் என்று கோவை ஆவின் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. சில்லறை விலையும், அட்டைதாரர்களுக்கான விலையும் இனி ஒன்றாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


செயலி (App) மூலம் அட்டை பெற புதிய காலக்கெடு:

இதுமட்டுமன்றி, பால் அட்டைகளைப் பெறுவது மற்றும் புதுப்பிப்பது தொடர்பான முக்கிய வழிமுறையையும் ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் பிரதி மாதம் 11-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிக்குள் ஆவின் பிரத்யேக மொபைல் செயலி (App) வழியாக ஆன்லைனில் தங்கு தடையின்றி பணம் செலுத்தி, தங்களது மாதாந்திர பால் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், அட்டை விநியோகத்தை எளிமைப்படுத்தவும் இந்த ஆன்லைன் ஆப் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆவின் தரப்பில் கூறப்படுகிறது.


நுகர்வோர்கள் அதிர்ச்சி:

தினசரி பால் வாங்கும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு இந்த மாதந்திர அட்டை பெரும் நிதியுதவியாக இருந்து வந்தது. தற்போது லிட்டருக்கு 2 ரூபாய் சலுகை ரத்து செய்யப்பட்டு, சில்லறை விற்பனை விலையிலேயே பால் விற்கப்படும் என்ற அறிவிப்பு நுகர்வோர் மத்தியில் கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்கள் பலரும் இந்த முடிவுக்கு தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். எனினும், நிர்வாகக் காரணங்களுக்காகவும் விநியோகச் சீரமைப்பிற்காகவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


ஏற்கனவே ஆவின் உற்பத்தி தமிழகம் முழுவதும் 3 லட்சம் லிட்டர் வரை குறைக்கப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடியும் ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது புதிய பரபரப்பை கிளப்பி உள்ளது.