நீலகிரி, கோவையில் வெளுத்துக் கட்டும் கன மழை.. இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை
சென்னை: கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கனமழையும், மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதால், சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட முன்னதாகவே கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் தொடங்கி விட்டது. கூடவே பலத்த மழையும் வந்து சேர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கேரளாவையொட்டியுள்ள பகுதிகளில் இயல்பை விட அதிக அளவில் மழை பதிவாகி வருகிறது.
அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தாழ்வு நிலையாக வலுப்பெற்று தமிழகத்தின் மேற்கு பகுதியில் பலத்த மழையை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. மேலும் மிக பலத்த மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள் (NDRF, SDRF) தயார் நிலையில் உள்ளன. மக்கள் பாதுகாப்பாக வீடுகளிலேயே இருக்குமாறு, அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வால்பாறை, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மைப் படைக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளவர்கள் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்ப விடுமாறும் வெளியில் போவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தென் மேற்குப் பருவ மழை பெய்து வரும் தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் ஒரே நாளில் கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்கள் மே 28 வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை போன்ற இடங்களில் மேகமூட்டத்துடன் இடியுடன் கூடிய மழை சில இடங்களில் பெய்யலாம். வெப்பநிலை சுமார் 35°C முதல் 36°C வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.