கோவையில் மாணவியிடம் அத்துமீறி அட்டூழியம் செய்த 3 குற்றவாளிகள்.. சுட்டுப் பிடித்த போலீஸ்

Su.tha Arivalagan
Nov 04, 2025,05:54 PM IST

கோயம்பத்தூர்: கோயம்பத்தூரில் மாணவியிடம் அட்டுமீறி அட்டூழியம் செய்த 3 பேர் கொண்ட கும்பலை போலீஸார் சுட்டுப் பிடித்துள்ளனர். 3 பேரும் தப்பி ஓட முயற்சிக்கும்போது போலீஸார் அவர்களது காலில் சுட்டுப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.


ஞாயிற்றுக்கிழமை அன்று, கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் 22 வயது மாணவி, தனது ஆண் நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தவாசி, கார்த்திக், காளிஸ்வரன் என்ற மூன்று பேர் அந்த காரை வழிமறித்து மாணவியை கடத்திச் சென்றனர். பின்னர், வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 


பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றவாளிகளைப் பிடிக்க ஏழு சிறப்பு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன.




செவ்வாய்க்கிழமை அதிகாலையில், போலீசார் குற்றவாளிகள் இருக்கும் இடத்தை கண்டறிந்து அங்கு விரைந்தனர். குற்றவாளிகளை நெருங்கியபோது, அவர்கள் போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளிகளின் கால்களில் காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக, ஆளும் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றன.


அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒரு செயல்படும் போலீஸ் படை உள்ளதா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் இந்த சம்பவத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், கோயம்புத்தூர் மற்றும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.


பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவருமான விஜய் உள்ளிட்டோரும் இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர்.


இருப்பினும் இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, திமுக செய்தித் தொடர்பாளர் டாக்டர் சையத் ஹபீசுல்லா பதிலளிக்கையில், பல நடவடிக்கைகள் எடுத்த போதிலும், பெண்களுக்கு எதிரான இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு முறையும் விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதை நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள சூழலில் நாம் பார்க்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.


இந்த நிலையில் தற்போது குற்றவாளிகள் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிடிபட்ட 3 பேரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.