திமுக-காங்கிரஸ் கூட்டணியில் என்ன தான் நடக்கிறது? குழப்பத்தில் தொண்டர்கள்
Feb 11, 2026,01:11 PM IST
சென்னை: தமிழக அரசியலில் கூட்டணி ஆட்சி குறித்த விவாதங்கள் மேலெழுந்துள்ள நிலையில், "தமிழகத்தைப் பொறுத்தவரை ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதே சமயம் கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் தனியார் ஊடக நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட 'தமிழ்நாடு ரவுண்ட் டேபிள்' நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறை என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. ஆட்சியில் பங்கு என்பது மாநிலத்தின் அரசியல் சூழலுக்கு ஒத்து வராது" எனத் தெரிவித்தார். இருப்பினும், திமுக கூட்டணி எஃகு கோட்டையாகத் திகழ்வதாகவும், வரவிருக்கும் தேர்தல்களிலும் திமுக கூட்டணியே அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
திமுக - காங்கிரஸ் உறவு:
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே விரிசல் இருப்பதாகப் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர், "திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகவும் இணக்கமாக உள்ளது. சிலர் திட்டமிட்டுப் பரப்பும் குழப்பங்கள் இங்கே எடுபடாது. அரசியலைத் தாண்டி ராகுல் காந்தியை நான் ஒரு சகோதரராகவே பார்க்கிறேன்; அவரும் என்னைப் அப்படித்தான் கருதுகிறார்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், "ஒன்றிய அரசு தொடர்ந்து திமுக அரசுக்குக் குடைச்சல் கொடுத்து வருகிறது. ஆனால், அவர்களின் எந்தத் தடைகளாலும் எங்களது வளர்ச்சியைத் தடுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது" எனச் சாடினார்.
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதில் :
முதல்வரின் இந்த கருத்திற்குப் பதிலளிக்கும் வகையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். கடந்த 2006-ஆம் ஆண்டு மக்கள் அளித்த தீர்ப்பைச் சரியாகச் செயல்படுத்தாதது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தவறு" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை திமுக.,வில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் காங்கிரஸ் முன்வைத்த ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைக்கு பதிலளித்து வந்தனர். ஆனால் தற்போது திமுக.,வின் தலைவராக இருக்கக் கூடிய மு.க.ஸ்டாலினே, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டில் ஒத்து வராது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவர் கூறிய பிறகும் கூட மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் மட்டுமல்ல, விசிக.,வும் இந்த கோரிக்கையை பல காலமாக முன் வைத்து வருகிறது.
ஏற்கனவே தொகுதி பங்கீடு குறித்த விவகாரத்தில் காங்கிரஸ்-திமுக இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் தற்போது ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையும் கூட்டணியில் விரிசலை அதிகரிப்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. கருத்து வேறுபாடு ஒரு பக்கம் இருந்தாலும், கூட்டணி தொடரும் என இரு கட்சிகளும் தொடர்ந்து சொல்லி வருகின்றன. இதனால் கூட்டணியில் என்ன நடக்கிறது? கூட்டணி தொடருமா அல்லது உடையுமா? என்ற தெளிவான முடிவுக்கு வர முடியாமல் இரு கட்சி தொண்டர்களும் குழம்பி உள்ளனர்.