எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
சென்னை: காங்கிரஸ் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுப்பது சரியல்ல. அவர்களது கட்சி விவகாரத்தில் தலையிட்டால் ஏற்பார்களா என்று விருதுநகர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தியின் சமீபத்திய செயல்பாடுகள் திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. தவெக தலைவர் விஜய்யை முதலில் அவர் சந்தித்தார். அவருடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் திமுக அரசை விமர்சிப்பது போல அவர் ஒரு கருத்தை டிவிட்டரில் வெளியிட்டிருந்தார்.
இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் அதை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தனர். அதில் மாணிக்கம் தாகூர் எம்.பியும் ஒருவர்.
இந்த நிலையில், மாணிக்கம் தாகூர் ஒரு பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
VCK, MDMK, CPI & CPM கட்சிகள் இந்தியா எதிர்கட்சி தலைவர் அவர்களிடம் “நடவடிக்கை எடுக்க” கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றி செய்தி படித்தேன். இது ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது:
காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா?
தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை ரவிக்குமார், துரை வைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோரிடம் “உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்” என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா?
கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன — பொது அழுத்த அரசியலால் அல்ல.
ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும்.
ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது; இது BJP–RSS அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும்.
இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வை தூண்டும்.
சிபிஐ மற்றும் சிபிஎம் தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும் ,கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல், அண்ணன் துரைவைகோ, திருமாவளவன் அண்ணனும், கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் “லக்ஷ்மண் ரேகை”யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல — ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது.
கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல என்று அவர் கூறியுள்ளார்.