சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்
புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) சுதா காந்திமதிநாதன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சபாநாயகரின் கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்றும், அவர் மிகப்பெரிய பொய்யைக் கூறுவதாகவும் சுதா விமர்சித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மசோதா பிரதமரின் உரை இல்லாமல், பிரதமர் அவையில் இல்லாத போது, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அப்போது காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் சொல்ல பயந்து பிரதமர் அவைக்கு வரவில்லை என கடுமையாக விமர்சித்தார். அதற்கு பதிளலித்த லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடியைத் தாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் சதி செய்துள்ளதாக ஒரு சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
நாடாளுமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படுவதாக ஆளுங்கட்சி தரப்பில் முன்வைக்கப்படும் வாதங்களின் தொடர்ச்சியாக இது பார்க்கப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக தானே பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியதாக தெரிவித்தார். மேலும் தமிழக எம்.பிக்களான ஜோதிமணி, சுதா உள்ளிட்டோர் பிரதமரின் இருக்கையை சுற்றிக் கொண்டு முற்றுகையிட திட்டமிட்டிருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
சபாநாயகரின் இந்தக் கருத்துக்குப் பதில் அளித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி சுதா, ராகுல் காந்தி எழுப்பியுள்ள மக்கள் நலன் சார்ந்த மற்றும் அரசியல் ரீதியான கருத்துக்களுக்கு ஆளுங்கட்சியினர் உரிய முறையில் பதிலளிக்க வேண்டும். அதை விடுத்து திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. நாங்கள் சதி எதிலும் ஈடுபடவில்லை. ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்திற்கு உள்ளே அமர்ந்து தான் எங்களுடைய போராட்டங்களை முன்னெடுத்தோம். இது மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுடைய உரிமை என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டப்பட்டதாகச் சபாநாயகர் கூறுவது அப்பட்டமான பொய் என்றும், ஒரு நடுநிலையான பதவியில் இருப்பவர் இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் எதிர்க்கட்சிகளுக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, ராகுல் காந்தியின் உரைகள் மற்றும் கேள்விகளால் ஆளுங்கட்சி நெருக்கடிக்கு உள்ளாவதாக எதிர்க்கட்சிகள் கருதும் நிலையில், சபாநாயகரின் இந்தக் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபாநாயகர் ஓம் பிர்லாவின் கருத்து ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என எதிர்க்கட்சிகள் வர்ணிக்கும் நிலையில், சுதா எம்.பி-யின் இந்த நேரடி விமர்சனம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது.