காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Meenakshi
Jul 28, 2025,08:33 PM IST

டெல்லி: பாடல்கள் காப்புரிமை விவகாரத்தில் சோனி நிறுவனத்துக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா அளித்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இளையராஜாவின் இளையராஜா மியூசிக் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2022ம் ஆண்டு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில், ஒலிப்பதிவுகளில் சோனி நிறுவனத்தின் பதிப்புரிமையை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.




சோனி மியூசிக் நிறுவனத்திற்குச் சொந்தமான 536 ஆல்பங்களில், 228 ஆல்பங்கள் பொதுமக்களுக்குக் கிடைத்ததாகவும், இதன் மூலம் சோனியின் பதிப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. ஆனால், ஒளிபரப்பப்பட்ட படைப்புகளின் உரிமை தங்களுக்குத்தான் இருப்பதாக இளையராஜா மியூசிக் என்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கான ஒளிபரப்பையும் தொடர்ந்து மேற்கொண்டது. இதையடுத்து, பதிப்புரிமையை மீறியதற்கான இழப்பீடு கோரி, இளையராஜாவின் ஐஎம்எம்பி நிறுவனத்திற்கு எதிராக சோனி மியூசிக் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 


இந்த நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னையில் பாடல் காப்புரிமை தொடர்பாக வழக்கு விசாரணையில் இருக்கும் போது, ஒரே தன்மை கொண்ட வழக்குகளை இரு நீதிமன்றங்களில் நடத்துவது முரண்பாடான தீர்ப்புக்கு வழிவகுக்கும் என  இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு தற்போது தள்ளுபடி செய்துள்ளது.