தோழர் நல்ல கண்ணு உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது

Su.tha Arivalagan
Feb 25, 2026,05:05 PM IST

சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எளிமையின் அடையாளமுமான தோழர் ஆர். நல்லகண்ணு (101) இன்று காலமானார். 1925 முதல் 2026 வரையிலான ஒரு நூற்றாண்டு கால அவரது வாழ்க்கை, தமிழக அரசியல் மற்றும் சமூகப் போராட்ட வரலாற்றின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது. 'வாழ்நாள் போராளி' என்று அழைக்கப்படும் அவரது மறைவு, தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தோழர் நல்லகண்ணுவின் மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாக அமையும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த, பகட்டில்லாத இந்த உன்னத மனிதரின் நினைவும் புகழும், மக்கள் மனதில் அழியாத கல்வெட்டாக நிலைத்திருக்கும் என்றும், தமிழக அரசின் உயரிய விருதான 'தகைசால் தமிழர்' விருது பெற்ற அவருக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.


பொதுமக்கள் அஞ்சலி மற்றும் இறுதி நிகழ்வுகள் :




இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மறைந்த நல்லகண்ணுவின் உடல் இறுதி மரியாதைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இன்று (பிப்ரவரி 25) மாலை 5 மணி முதல் கட்சியின் தலைமை அலுவலகமான 'பாலன் இல்லத்தில்' பொதுமக்கள் அஞ்சலிக்காக நல்லுடல் வைக்கப்படுகிறது.நாளை (பிப்ரவரி 26) மாலை 3 மணி வரை பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தலாம். நாளை மாலை 3 மணி அளவில், கட்சித் தொண்டர்களின் அணிவகுப்புடன் 'பாலன் இல்லத்தில்' இருந்து ஊர்வலமாக உடல் கொண்டு செல்லப்படும் என தெரிவித்துள்ளார்.


உடல் தானம்: கல்வியில் முடியும் வாழ்வு :


தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகப் போராடிய தோழர் நல்லகண்ணு, மறைவுக்குப் பின்னரும் சமூகத்திற்குப் பயனுள்ளவராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரது விருப்பப்படியே, அவரது உடல் மருத்துவ மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது. நாளை மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் அவரது நல்லுடல், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முறைப்படி ஒப்படைக்கப்பட உள்ளது.