சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

Su.tha Arivalagan
Mar 21, 2026,05:16 PM IST

சென்னை: ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து மற்ற கூட்டணி கட்சிகளும் கூடுதல் சீட் கேட்டு, திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஒவ்வொரு கட்சிகளுடனும் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) முன்வைத்துள்ள ஒரு முக்கிய நிபந்தனை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.


5 தொகுதிகள்: சிபிஎம்-ன் சென்னை பிளான் :


திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 சீட்கள் வேண்டும் என கேட்டு வருகிறது. ஆனால் 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் என சொல்லப்படுகிறது. எவ்வளவோ பேசிப் பார்த்தும் திமுக 6 சீட்கள் தர ஒப்புக் கொள்ளாத நிலையில், திமுக தரும் 5 சீட்களை பெற்றுக் கொள்ள சிபிஎம் ஒப்புக் கொண்டுள்ளதாம். ஆனால் அந்த 5 தொகுதிகளில் ஒன்றாக சென்னையில் உள்ள ஒரு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என சிபிஎம் தரப்பில் வலுவான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட அக்கட்சி திட்டமிட்டுள்ளது.


பெரம்பூர் தொகுதியின் வரலாறு :




பெரம்பூர் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என சிபிஎம் கேட்பதாக சொல்லப்படுகிறது. சிபிஎம் சென்னை தொகுதியை வலியுறுத்துவதற்குப் பின்னால் ஒரு நீண்டகால அரசியல் வரலாறு உள்ளது. குறிப்பாக, சென்னையின் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. 2001 முதல் 2011 வரை இந்த 10 ஆண்டு காலத்தில் நடைபெற்ற மூன்று தேர்தல்களில் (2001, 2006, 2011) பெரம்பூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தொழிலாளர்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில், கட்சியின் தொழிற்சங்கப் பலம் வெற்றியைத் தேடித் தந்தது.


திமுக-வின் நிலைப்பாடு என்ன? :


கடந்த சில தேர்தல்களில் சென்னையில் உள்ள பெரும்பாலான தொகுதிகளை திமுக நேரடியாகவே எதிர்கொண்டது. தற்போதைய சூழலில், சென்னையில் ஒரு தொகுதியை சிபிஎம்-க்கு விட்டுக் கொடுப்பது குறித்து திமுக தலைமை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. கூட்டணியைப் பலமாக வைத்திருக்கவும், வாக்குகள் சிதறாமல் இருப்பதை உறுதி செய்யவும் சிபிஎம்-ன் இந்த நிபந்தனையை ஏற்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.