கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல், அதிர்ச்சி!

Su.tha Arivalagan
Jul 08, 2025,05:51 PM IST

சென்னை: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.




உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிமிலேஷ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் - உறவினர்களுக்கும் - நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு பேருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, மாண்புமிகு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்  மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்.


இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும் - பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.