அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

Meenakshi
Oct 24, 2025,05:13 PM IST

சென்னை: இன்று காலை உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்று மொந்தா புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


வட கிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட போதிலும், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சமீபத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மட்டுமே வலுப்பெற்றது. புயலாக வலுவடையவில்லை.  


இந்நிலையில், வடக்கிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளிலும், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக் கூடும் எனவும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.




இந்நிலையில், தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை 5.30 மணிக்கு தென்கிழக்கு வங்ககடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தெளிவாகத் தெரியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இது அக்டோபர் 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவடையும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதே போல் 27ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு தாய்லாந்தால் பரிந்துரைக்கப்பட்ட மொந்தா புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மொந்தா புயல் காரணமாக அக்டோபர் 27ஆம் தேதி  மிக கன மழை பெய்யக்கூடும் என்பதால், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.