சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு...ஓட்டல்கள், பெட்ரோல் பங்க்குகள் மூடல்
சென்னை : சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஓட்டல்கள், பேக்கரிகள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகின்றன.
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக வேறு வழி இல்லாமல் சில ஓட்டல்கள் விறகு அடுப்பு சமையலுக்கு மாறி, தொடர்ந்து வியாபாரம் செய்து வருகின்றன. ஆனால் விறகு அடுப்பு சமையலுக்கு மாற முடியாத நிலையில் இருக்கும் ஓட்டல்கள் சிலிண்டர் கையிருப்பு இருக்கும் வரை வியாபாரம் செய்து விட்டு, பிறகு அடுத்தடுத்து மூடப்பட்டு வருவதால் மக்கள் உணவுக்காக அவமதிப்பட்டு வருகின்றனர். திறந்து இருக்கும் ஓட்டல்கள், கடைகளில் டீ, காபி, உணவு உள்ளிட்டவைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக மருத்துவமனை, அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு அருகில் உள்ள ஓட்டல்கள் மூடப்பட்டு வருவதால், ஓட்டல் உணவுகளை நம்பி இருந்தவர்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் ஆட்டோக்கள், சிலிண்டர் பயன்படுத்தி இயக்கப்பட்டு வந்த மற்ற வாகனங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயரக் கூடும் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.300 வரை உயரக் கூடும் என பரவி வதந்தி காரணமாக இரவில் இருந்தே அதிக அளவிலான மக்கள் பெட்ரோல் பங்க்குகள் நோக்கி படையெடுத்து வருகின்றனர். மக்கள் கேன்கள் பெட்ரோல், டீசல்களை வாங்கிச் சென்றதால் பெட்ரோல் பற்றாக்குறை காரணமாக பல இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டு வருகின்றன.
ஆனால் தமிழகத்தில் ரெட்ரோல், டீசல் தட்டுப்பாடு கிடையாது. போதி அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளதாக பெட்ரோல் விநியோக சங்கத்தினர் விளக்கம் அளித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற வதந்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்றும், இதனால் பீதி அடைய வேண்டாம் என்றும் பெட்ரோல் விநியோக சங்கத்தினர், அதிகாரிகள் கூறி வருகின்றனர்.