அரபிக் கடலில் வலுப்பெற்றது.. காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இது புயலாக வலுப்பெறுமா..?
சென்னை: அரபிக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு மூன்று மாநில பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில், ஆற்றில் குளிக்கவோ நீர்நிலைகளுக்கு அருகில் செல்லவோ வேண்டாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.இது தவிர கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இரண்டு நாட்கள் உள்ள நிலையில், அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக முன்கூட்டியே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த நிலையில் அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, ரத்தினகிரிக்கும் டாபோலிக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இது புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து குவாரிகளை மூட கேரளா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் 25, 26 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதனால் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் மழை பெய்யும் மாவட்டங்கள்
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, கரூர், விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, ஆகிய 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.