வங்க கடலில் வலுப்பெற்றது.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம்..!
May 28, 2025,01:43 PM IST
சென்னை: வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று அதிக கன மழை பெய்தால் அப்பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்ய இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதிக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி, கோழிக்கோடு, வயநாடு, மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு கேரளாவில் மே 30ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்க கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசைகளில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் மழை தீவிரமடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் காலை 10 மணிக்கு மழை பெய்யும் மாவட்டங்கள்:
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் குமரி ஆகிய 8 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள்மழைக்கு வாய்ப்புள்ளது.