இரவின் மடியில்

Su.tha Arivalagan
May 05, 2026,05:01 PM IST

- ஔவை அ.ர.தீபாரவி


கொஞ்சமல்ல

நிறையவே

நினைத்தாலே இனிக்கும் காலமது


நிலவு ஒளியில்

உறவுகளோடு 

வாசலமர்ந்த

இரவது


கதைகேட்க நிறைய காதுகள்

காத்திருந்த நேரமது


யார்கூறுவது

யார்கேட்பது 

யாருக்கும் தெரியாத பகிர்தலது


அன்றாடவாழ்வின்

அழகான நினைவுகளை

மீட்டும் இடமது




கூடிச்சோறு தின்ன எங்கோ 

ஓடிப்போகும்

பசியது


பேசிக்கொண்டே 

தூங்கிப் போன

காலத்தின் அழகியலது


ஒரு கூட்டுப்

பறவைகளாய்க்

கொஞ்சிய

வாழ்வது


நெஞ்சில் என்றும் 

இன்பம்

நீங்காத

நினைவது


எதைச்சொல்ல 

எதைவிடுக்க

20வரிகள் எப்படிப் 

போதும்?


பாட்டி சொன்ன தேவலோகத்து

யானைக்க்கதையது


சித்திசொன்ன

பாம்புக்கதை பேய்க்கதை

அய்யோ

பயங்கரம்


சின்னவயசுல  

நான் சொல்வேனாம் 

சுல்லானும்

உள்ளானும்


கருப்புவண்ண

எழுதுகோல்

அலமேலு அம்மா

கொடுத்தது


பந்துமுனைப் பேனா 

கணபதி 

அண்ணா தந்தது


ஏடு முழுதும் நிரம்பிய

தோழிகளின் 

உணர்வூட்டமது


மண்சாலை மாட்டுவண்டி புத்தகப்பை சுமந்த பயணமது


வெள்ளித்திரை

காண்பதில்

வியந்து

அகன்ற 

விழிகளது


வீதிவரை

காதுவரை

கதையளக்கும் 

கவினுறு

காட்சியது


பழகிய 

முகமெல்லாம்

பளிச்சென்று 

வந்துசெல்லும் 

இரவிது


(கவித்துளி கற்பனையின் ஊற்று கவிதையின் காற்று புதுக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).