விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
சென்னை: தீபாவளி வந்தாச்சு.. நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் சென்னையிலிருந்து பல லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுப் போயுள்ளனர். இதனால் தலைநகர் சென்னை வழக்கம் போல வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. மழை குறுக்கீடு இருந்தாலும் கூட மக்கள் ஆரவாரமாக கடைசி நேர பர்ச்சேஸ் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அனைத்து வணிகப் பகுதிகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக தி.நகர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் அனைத்துக் கடைகளிலும் கடைசி நேர பர்ச்சேஸ் தீயாக நடந்து கொண்டுள்ளது.
பட்டாசு விற்பனையும் தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பசுமை பட்டாசுகளை பலரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இந்த நிலையில் சென்னையிலிருந்து தெற்கு மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் மக்கள் குடும்பம் குடும்பமாக பண்டிகையைக் கொண்டாட கிளம்பிப் போயுள்ளனர். கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். மக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்களை அரசு இயக்கி வருகிறது. அதேபோல சிறப்பு ரயில்களும் விடப்பட்டுள்ளன. இருப்பினும் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைத்துமே நிரம்பி வழிகின்றன.
சென்னையிலிருந்து பல லட்சம் கிளம்பிப் போயிருப்பதால் நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. முக்கியச் சாலைகளில் கூட்டமே இல்லை. வழக்கமான கூட்டம் இல்லாததால் டிராபிக் எளிதாக இருக்கிறது.
சென்னை மட்டுமல்லாமல் மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலுமே தீபாவளி கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. வணிகப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் முடுக்கி விடப்பட்டுள்ளது.