டெல்லி கார் குண்டு வெடிப்பு... காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் பிரதமர் மோடி!
டெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்த சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். பலர் பலத்த காயமடைந்தனர். மேலும், வெடிகுண்டு வெடித்து சிதறியதில், அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இந்த சம்பவம் குறித்து புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த காரை ஓட்டி வந்தது ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது. முகமது உமருடன் தொடர்பில் இருந்ததாக பெண் மருத்துவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில். அரசுமுறை பயணமாக 2 நாட்கள் பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி, பயணத்தை நிறைவு செய்து கொண்டு இன்று டெல்லி திரும்பினார். அவர் நேராக டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனைக்குச் சென்று, அங்கு குண்டுவெடிப்பில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.