பார்த்துப் பதறாமல் நகர்ந்து போகும் காற்றழுத்தம்.. அதான் மழை இன்னும் நிக்கலையாம்!

Su.tha Arivalagan
Dec 03, 2025,11:29 AM IST

- அகிலா


சென்னை: சென்னையிலும் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களிலும் மழை இன்னும் விடாமல் பெய்வதற்கு, தற்போது வங்கக் கடலில் தமிழ்நாடு கடற்கரையோரமாக நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தம் மிக மிக மெதுவாக நகர்வதே காரணம் என்று வானிலை மையம் விளக்கியுள்ளது


தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரை அருகே தென்மேற்கு வங்க கடலில் டிட்வா புயலின் எச்சம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது மெதுவாக நகர்ந்து வருகிறது. வட தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரையின் தென்மேற்கு திசை நோக்கி நல்ல நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆறு மணி நேரத்திற்குள் இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து, குறைந்த அழுத்த பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


புயல் வலுவிழந்த நிலையிலும் கூட விடாமல் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் புறநகர்களிலும் கடந்த 2, 3 நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. நல்ல வேளை பேய் மழையாக பெய்யவில்லை. அப்படிப் பெய்திருந்தால் பெரும் பாதிப்பை சென்னை சந்தித்திருக்கும். ஆனால் தற்போது பெய்த இந்த கன மழைக்கே சென்னையின் பல சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதைக் காண முடிந்தது.




செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  விடப்பட்டுள்ளது. 


(அகிலா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)