தேவகோட்டை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா.. நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற 8ம் வகுப்பு மாணவர்கள்!
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பிரியாவிடை விழா மற்றும் ‘ஒளி ஏற்றுதல்’ நிகழ்வு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக ஆசிரியர் முத்துலெட்சுமி அனைவரையும் வரவேற்றார். கல்வியின் உன்னதத்தை விளக்கும் வகையில் மாணவிகளின் சிறப்பான திருக்குறள் நடனம் நடைபெற்றது. தொடர்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தீப ஒளியை ஏற்றி விழாவை முறைப்படி தொடங்கி வைத்தார்.
தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்ற ஒளியைக் கொண்டு, எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் மெழுகுவர்த்திகளை ஏந்தி நின்றனர். மாணவி அபர்ணா உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் அனைவரும் அதனை வழிமொழிந்தனர்.
பசுமை நிறைந்த நினைவுகளுடன்
தங்கள் கல்வியறிவு எனும் ஒளியை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் அடையாளமாக, எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஏழாம் வகுப்பு மாணவர்களிடம் அந்த மெழுகுவர்த்தி ஒளியை வழங்கினர். ஏழாம் வகுப்பு மாணவர்கள் சார்பில் மாணவி நந்தனா ஏற்புரை வழங்கினார்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், மாணவர்கள் தாங்கள் முதலாம் வகுப்பு முதல் இப்பள்ளியில் பயின்ற இனிமையான நினைவுகளையும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலையும் பகிர்ந்து கொண்டனர். விழாவில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர். இறுதியாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூற விழா நிறைவடைந்தது.