மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!

Su.tha Arivalagan
Aug 10, 2026,05:30 PM IST

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


பள்ளித் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேவகோட்டை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மேரி, ஆரோக்கிய செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு 400 மி.கி. அல்பென்டசோல் மாத்திரைகளை வழங்கினர்.




நிகழ்ச்சியில் செவிலியர்கள் பேசுகையில், மாணவர்கள் இனிப்பு உணவுகளை குறைத்துக்கொண்டு, கீரை மற்றும் காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு முன்பும், விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த பிறகும் கை, முகம், கால்களை நன்றாக கழுவ வேண்டும். இதன் மூலம் குடற்புழு முட்டைகள் உடலுக்குள் செல்வதைத் தடுக்க முடியும் என அறிவுறுத்தினர். ஆசிரியர் ஸ்ரீதர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.


5 முதல் 13 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ரத்தசோகை உள்ளிட்ட பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.