தேவகோட்டையில் மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்.. 100% வாக்களிக்க மக்களுக்கு அழைப்பு!

Su.tha Arivalagan
Apr 09, 2026,06:21 PM IST

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஜனநாயகக் கடமையை வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் வீதி வீதியாகச் சென்று முன்னெடுத்த தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு தோட்டக்கலைப் பண்ணை அலுவலர்கள் இணைந்து இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர். "ஜனநாயகத்தைக் காக்க ஒரு விரலைப் பயன்படுத்துங்கள்", "100% வாக்களிப்போம்" போன்ற கோஷங்கள் முழங்க, மாணவர்கள் வீதிகளில் அணிவகுத்துச் சென்றனர்.




நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை தோட்டக்கலை உதவி இயக்குனர் பெப்பின் இளம்பரிதி முன்னிலை வகித்து, வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் ஒரு வாக்கின் வலிமை குறித்தும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விளக்கமளித்தார். முன்னதாக ஆசிரியை முத்துமீனாள் அனைவரையும் வரவேற்றார்.


வெறும் கோஷங்களுடன் நிறுத்திக் கொள்ளாமல், கலைநிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தின.:


பேச்சுப் போட்டிகள் - மாணவி நித்யா "அரசியலை அறிந்துகொள்", ரக்ஷிதா "முதல் முறை வாக்காளர்", ரித்திகா "எனது வாக்கு எனது உரிமை" ஆகிய தலைப்புகளில் உரையாற்றினர்.


பாடல் மற்றும் உரையாடல் - மாணவி நந்தனா விழிப்புணர்வு பாடல்களைப் பாடினார். மாணவிகள் மாலினி மற்றும் மோனிகா "நமது வாக்கு நமது வலிமை" என்ற தலைப்பில் விழிப்புணர்வு உரையாடலை நிகழ்த்தினர்.




நாடகம் மற்றும் கவிதை - மாணவர்கள் தங்களின் நடிப்பு மற்றும் கவித்திறன் மூலம் தேர்தலின் முக்கியத்துவத்தை எளிமையாக விளக்கினர்.


இந்த நிகழ்வில் தோட்டக்கலை பண்ணை உதவி அலுவலர் விக்னேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஸ்ரீதர் நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். நிறைவாக, ஆசிரியை வள்ளிமயில் நன்றியுரை ஆற்றினார்.




மாணவர்களின் இந்தத் துடிப்பான முயற்சியைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், மாணவர்களின் சமூக அக்கறையைப் பாராட்டித் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.