வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை

Su.tha Arivalagan
Sep 04, 2026,04:46 PM IST

தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மதுரை அகில இந்திய வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மற்றும் அறிவிப்பாளர் நாகநந்தினி ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.


நிகழ்ச்சிக்கு ஆசிரியை சிவரஞ்சனி வரவேற்புரை வழங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.


நிகழ்ச்சியில் வேல்முருகன் பேசுகையில், அகில இந்திய வானொலியில் மாணவர்கள் நலன் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளும், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் மனநல ஆலோசகர்களின் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.




வானொலி நிகழ்ச்சிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு பேசுவதன் மூலம் அவர்களின் பேச்சுத்திறன் வளர்வதுடன், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளிலும் பயனுள்ளதாக இருக்கும். வானொலி நிகழ்ச்சிகளை ஆன்லைன் மூலமாகவும், மொபைல் போனிலும் கேட்கவும் பார்க்கவும் முடியும் என்றார்.


“படிக்கக்கூடிய காலம் பொற்காலம். மாணவர்கள் எந்தச் சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல் நன்றாகப் படிக்க வேண்டும். வானொலி அறிவிப்பாளராகப் பணியில் சேர குறைந்தது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தெளிவாக உச்சரிக்கும் திறனும், நன்றாகப் பேசும் திறனும் அவசியம். அரசு வானொலி நிலையத்தில் நிரந்தரப் பணியில் சேர அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.


அரசுத் தேர்வுகளில் பெரும்பாலும் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருந்தே வினாக்கள் கேட்கப்படுவதால், மாணவர்கள் பாடங்களை நன்றாகப் புரிந்துகொண்டு படிக்க வேண்டும். வானொலி எப்போதும் நல்ல தகவல்களையும், மனதிற்கு இதமான பாடல்களையும் வழங்குகிறது. எனவே, வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்” என்று அறிவுரை வழங்கினார்.


நிகழ்ச்சியை மாணவி நந்தனா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.