தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாகவும், படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் பட குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது இயக்குனராக உருவெடுத்துள்ளார். அதன்படி பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது இட்லி கடை என்ற திரைப்படத்தில் நடித்து இயக்கியுள்ளார் .
டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நடிகர் அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே தனுஷின் 52 ஆவது படமான இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்துடன் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அருண் விஜய் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டதாக பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.