ஓசூரில் கூட்டம் நடத்தினால்.. இப்படி ஒரு அரசியல் சென்டிமென்ட்டா.. வைரலாகும் மூட நம்பிக்கை!

Su.tha Arivalagan
May 05, 2026,11:18 AM IST

சென்னை: ஓசூரில் பொதுக்கூட்டம், பிரசாரம் செய்தால் மீண்டும் அந்த கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு கிடையாது என்று மூட நம்பிக்கை ஒன்று உள்ளது. அந்த செண்டிமெண்ட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போது தோல்வியைத் தழுவியுள்ள மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிக்கிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.


தமிழ்நாட்டில் மூட நம்பிக்கைகளுக்குப் பஞ்சமே கிடையாது. அதிலும் அரசியல் மற்றும் திரைத்துறையில் சில சென்டிமென்ட்களை கண்டிப்பாக கடைப்பிடிப்பார்கள். அப்படிப்பட்ட சென்டிமென்ட்டில் ஒன்றுதான் ஓசூரில் பொதுக்கூட்டம் நடத்தினால்..!


தமிழக அரசியலில் நிலவும் பல்வேறு நம்பிக்கைகளில் இந்த ஓசூர் செண்டிமெண்ட் முக்கியமானது. அதாவது, ஓசூரில் பொதுக்கூட்டம் நடத்திப் பிரசாரம் செய்யும் கட்சி, அந்தத் தேர்தலில் மாநில அளவில் ஆட்சியைப் பிடிக்காது என்பது பல ஆண்டுகளாக நிலவும் ஒரு பேச்சாக இருந்து வருகிறது.




2001 மற்றும் 2011 சட்டசபைத் தேர்தல்களின்போது, அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி ஓசூரில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட போது, அந்தத் தேர்தல்களில் திமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.


2019ல் ஒரு சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. அது ஒரு மினி பொதுத் தேர்தல். காரணம், ஓசூர் உள்ளிட்ட 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் அது. அதில் திமுக தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். ஓசூரில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றாலும், மாநில அளவில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு வந்த ஆபத்தும் அப்போது நீங்கியது.


1989, 1996, 2006 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் கருணாநிதியோ அல்லது ஸ்டாலினோ ஓசூர் நகருக்குள் நேரடியாக வந்து பிரசாரம் செய்யவில்லை. அந்த நான்கு தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.


தற்போது நடந்த சட்டசபைத் தேர்தலில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓசூரில் (அந்திவாடி பகுதியில்) நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


ஓசூர் செண்டிமெண்டைத் தவிர்க்கவே, கூட்டத்தை ஓசூர் நகருக்குள் நடத்தாமல் அண்டை தொகுதியான வேப்பனஹள்ளி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடத்த திமுக திட்டமிட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், பொதுக்கூட்டம் "ஓசூர் பிரசாரம்" என்றே அடையாளப்படுத்தப்பட்டது.


இந்த நிலையில் ஓசூர் சென்டிமென்ட் பலித்து திமுக ஆட்சியை இழந்துள்ளது. கூடுதலாக ஓசூர் தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ண ரெட்டி ஜெயித்து விட்டார்.


இதேபோல தஞ்சாவூர் பெரிய கோவில் தொடர்பாகவும் ஒரு மூட நம்பிக்கை அரசியல்வாதிகளிடம் உள்ளது என்பது நினைவிருக்கலாம்.


1000 பெரியார் வந்தாலும்...!