மாற்றுத்திறனாளிகள்..கட்டணச்சலுகைஇல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்
சென்னை: ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளில், ரயில்வே கட்டணச் சலுகை பெறாத மாற்றுத்திறனாளிகளும் மத்திய அரசின் UDID அதாவது பல்நோக்கு அடையாளச் சான்று அட்டையை வைத்துப் பயணிக்க அனுமதி அளித்து ரயில்வே வாரியம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே வாரியம், அனைத்து மண்டல முதன்மை வர்த்தக மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புறநகர் ரயில்கள் (Suburban Trains) மற்றும் சாதாரண பயணிகள் ரயில்களில் (Passenger Trains) உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளில், மத்திய அரசின் அதிகாரமளித்தல் துறை (DEPwD) வழங்கிய செல்லுபடியாகும் UDID அட்டை வைத்திருப்பவர்கள் முழு கட்டண பயணச்சீட்டு (Full Ticket) அல்லது சீசன் டிக்கெட் எடுத்துப் பயணிக்கலாம்.
வழக்கமான விதிமுறைகளின்படி, மருத்துவச் சான்றிதழ் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில்வே அடையாள அட்டை (Railway Divyangjan Card) வைத்து கட்டணச் சலுகை பெறும் மாற்றுத்திறனாளிகள் இந்தப் பெட்டிகளில் பயணிக்க முடியும்.
தற்போது, ரயில்வே கட்டணச் சலுகை பெறாவிட்டாலும், செல்லுபடியாகும் UDID அட்டை மற்றும் அதற்குரிய முழு கட்டணப் பயணச்சீட்டு வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளும் இதில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.---
இந்த உத்தரவு UDID அட்டை வைத்திருப்பவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளில் பயணம் செய்ய மட்டுமே அனுமதிக்கிறது. அதேசமயம், ரயில்வே கட்டணச் சலுகை எதுவுமே வழங்கப்படாது என்பது மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கட்டணச் சலுகை தேவைப்பட்டால், அதற்கு ரயில்வே வழங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை இருக்கவேண்டியது அவசியமாகும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளில், உரிய சான்றிதழ்கள் மற்றும் பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் இதர பொதுமக்களுக்கு எதிராக ரயில்வே சட்டம் 1989-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவை உடனடியாக அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி, நடைமுறைப்படுத்த அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.