Tamil Poem: தமிழில் பிறமொழிக் கலப்பு சரியா, தவறா???

Su.tha Arivalagan
Jul 19, 2026,10:11 AM IST

- டிலாணி ஸ்ரீதரன்


மொழிகள் பேசுகிறது! 


உயிர் தாங்கிய கருவறையாய் உலகம் ஒன்று,

கதிர் படர்ந்த சூரியனாய் எங்கும் உறவுகளென்று,


புதிராக அகிலத்தைப் பார்க்க முகத்தில் விழிகளிரண்டு,

உதிராத விரல்களுக்கிடையில் இணையும் எழுதுகோலும்  பதினொன்று,


முடியாத நேரத்தில் மூன்றாகும் கால்களும் ஊன்றுகோலென்று,

வரிசையாக வாய்மொழிந்தோம் கலைகளும் அறுபத்து நான்கென்று,




சிலையாக செதுக்கினோம் தெய்வங்களும் பலவென்று,

நுழையாத நுண்ணறிவுகளையும் மூளைக்கு

புகுத்தினோம் படியென்று,


பயிராக இயற்கையையும் புள்ளினத்தையும் அறுசுவையாக்கினோம் உணவென்று,

புரியாத பாடல்களையும் நுட்பமாக ரசித்தோம் இசையென்று,


புராதனங்களையும் பாதுகாத்தோம் பழங்கால ஆய்வின் நூதனமென்று,

புத்தகங்களையும் காப்பியமாக சுவாசிக்கின்றோம் வாழ்வின் தத்துவமென்று,


புது வடிவ ஆடைகளையும் உடுத்துகின்றோம் நாகரீகமென்று,

பிற நாடுகளையும் வரவாக்கினோம் நட்பின் தேசப்பற்றென்று, 


நாணயங்களையும் சேமிக்கின்றோம் நாளைய சந்ததிக்கென்று,

நான்கு பிள்ளைகளையும் பிரசவிக்கின்றோம் எதிர்கால தலைமுறையென்று,


மனித வாழ்வில் எல்லாவற்றுக்கும் தேவைப்படுகின்றது துணையொன்று,

தனித்துவத்தை போற்றுங்கள் பரவாயில்லை சிறப்பு இதுதானென்று,


தள்ளி வைக்காதீர்கள் அந்நிய மொழியின் கலப்பு ஏனென்று,

தன்மானம் காக்க உயிரிருந்தால் அதுவும் கேட்கும் உனக்கென்னவென்று, 


எழுதினேன் நானும் என் எண்ணத்தில் தோன்றியதை கவியென்று,

எனக்குள்ளும் உறைகின்றது ஏன் இந்த வேறுபாடென்று......