Tamil Poem: குமூகத்தில் போலி மனிதர்கள்
- டிலாணி ஸ்ரீதரன்
தன்னைத் தானே தலைவர் என்பார்கள்
தன்னுள்ளிருக்கும்
தரம் இல்லாத தன்மையை மறைப்பார்கள்,
தன்னலமாய் தனக்குத்தான்
தகுதியெல்லாமே
என்பார்கள்
தறிகெட்ட தகவல்களை
தயக்கமில்லாமல்
பரப்புவார்கள்,
நடிப்பில் நல்ல
நயவஞ்சக நளினம் படைப்பார்கள்
நட்பெனும் நல்லுறவை
நடித்தே நஞ்சாக்குவார்கள்,
நன்றி மறந்த
நகரத்தின் நன்றிலியவர்கள்
நல்லவன் போல
நடைபயிலும் நரகலவர்கள்,
நகமாய் நம்முடன் வளர்ந்தே
நயமாய் பேசும் சாகசகாரர்கள்,
நாகரிகத்தையும் நாசமாக்கி
நாளும் புத்தன் போல
பேசிடும் பேடியர்கள்
நாடகம் அரங்கேற்ற
நாட்டையும் காட்டிக் கொடுக்கும் நாசக்காரர்கள்,
சங்கத் தமிழே என் மூச்சு என்பார்கள்,
சாதி மதம் எனக்கில்லை எல்லோரும் சமம் என்பார்கள்,
நீதி கேட்டால் சத்தியமே நான் தான் உன் புத்தி கெட்டு விட்டதா என்பார்கள்,
சரித்திரம் பேச வேண்டும் என்று தரித்திரமான வேலைகளை தனக்குள்ளே செய்வார்கள்,
தேவைகளுக்கு மட்டும் நான் இல்லை நானிலம்
நலமுற வேண்டுமென கரம் கூப்பி வணங்குவார்கள்,
தேவை முடிந்ததும் கை கழுவி எள்ளி நகைப்பார்கள்,
என் இனம் தமிழ் எதிற்கீடு என்பார்கள்
விண்ணுலகம் போற்றும் மண்ணுலகம் மதிக்கும் என்பார்கள்,
மறைவாய் ஒளிவாய் நிறைவாய்
மனிதாபிமானமில்லாது
தமிழனையே இழிவாய் பேசுவார்கள் கேட்டால் இயற்கையென்பார்கள்,
இலக்கியம் வளர்க்க வேண்டும் இனியவை கூறும் வேண்டும் என்பார்கள் அகத்தில் ஒன்று புறத்திலும் மாறி மாறி நிறமாறும் பச்சோந்தாயாவார்கள்,
அறிவுரை ஆயிரம் சொல்லி அடுத்தவரை களங்கப்படுத்துவார்கள்
அறிவற்ற மூடனை போல் நடந்து கொள்வார்கள்,
பொதுநலம் காப்போம் என்பார்கள்
சுயநலத்தின் அரசராவார்கள்,
சிந்தித்து பேச சொல்வார்கள்
சிந்தனையற்ற கயவராவார்கள்,
சிரித்து பேசி கதைக்கும் சமூகத்தை சீர்குலைக்கும் நாசக்காரர்கள்,
என்னில் வஞ்சகம் இல்லை இதுதான் என் இயல்பு என வாய் கூசாமல் பொய்யுரைப்பார்கள்,
மெய்யிலே வஞ்சகத்தின் புதையலாவார்கள்,
கண்டறிந்த உண்மையை மூடி மறைக்கப் பார்ப்பார்கள்
அவிழ்த்து விட்டால் அடுத்த நொடி அறைகூவல் விடுப்பார்கள்,
தலைவனென்பார்கள் வள்ளலென்பார்கள்
அடுத்தவரை ஏமாற்ற மறக்க மாட்டார்கள்,
காரியம் நடக்க காலையும் பிடிப்பார்கள்
காரியம் முடிந்த கையோடு கழுத்தையும் நெருக்க தயங்க மாட்டார்கள்,
கொஞ்சிப் பேசி கெஞ்சும் காமுகர்கள்
மிஞ்சும் வார்த்தையில் நஞ்சும் கலக்கும் நெஞ்சம் கொண்டவர்கள்....