தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!
- டிலாணி ஸ்ரீதரன்
கருவறை சுமந்ததை மறந்த விண்ணறை சிற்பங்களே!
கருவாய் உருவாகி கன்னித்தமிழில் உறவாகி,
மெல்லிசையில் வருடலாகி,
மேன்மைத் தமிழை ஒலியாக்கி,
செந்தமிழை மூச்சாக்கி,
மேனி தீண்டலில் வளைவாக்கி,
கொங்கு தமிழினை இசையாக்கி,
கோர்வையில் முத்தமிழின் கதையாக்கி,
தடம் புரளாத மூத்த மொழியில் "பனிக் குடமாகி"
பாதுகாப்பின் கவசமாகி*
தரணியில் தங்கத் தமிழாகி,
இன்ப மொழியில் இமையாகி இனிய தாலாட்டை செவி தாங்கி,
ஆதி மொழியில் அசைவாகி
திண்ணைப் பேச்சில் திடமாகி,
நற்றமிழில் நலமாகி இயற்றமிழை உருவாக்கி,
சொற்களில் பொருளாகி வார்த்தைகளை வடிவாக்கி,
ஐயிரண்டு மாதம் இளந்தமிழை அரும்பதமாக்கி
ஆடையின்றி பிறந்து,
எதுவும் இன்றி விழித்து,
தொன்மையின் மூச்சான பழந்தமிழை முதலில் சுவாசித்த தமிழனே!
கல்லறை சென்று மண்ணறை வாழ்த்தினாலும்...
அன்னை உன்னை ஈன்ற போது செந்நாவில் வந்தெம்மை வாழ்த்திய அமுது மொழியை ஒருபோதும் மறவாதே!