நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
- டிலாணி ஸ்ரீதரன், இலங்கை
காதலும் மோகமும்
சேர்ந்திட பாதகமாக பிறந்தேனே,
பருவத்தில் உருவம் மாறியதால்
பெற்றவர்களுக்கே
பாதகத்தியானேன்,
ஆதரிக்க வேண்டியவர்களே
அவமதிக்க வேடிக்கை
பொருளானேன் ,
நயவஞ்சகத்தால்
நடுவீதிக்கு வந்து நாதியற்ற அனாதையாகினேன் ,
விதியின் சதியால்
பேடியென்ற பட்டமும் பெற்றேன் ,
வழித் தெரியாததால்
வழிப்போக்கர்களின்
வன்முறைகளுக்கும்
ஆளாகினேன்,
எள்ளி நகைக்கவும்
ஏளனமாக பார்க்கவும்
ஏதுவானேன்,
ஏனிந்த பிறப்பென என்னை நானே
நினைத்தேன்,
மண்ணுக்கு அடித்துக் கொள்ளும் மானங்கெட்ட
சமுதாயம் ,
ஆணும் பெண்ணுமாகிய
எங்களை ஒதுக்கத்தான்
வேண்டுமா?
கொள்ளி போடக்கூட
தேவையில்லையென்று
விடுகிறாயே! தள்ளி,
உணர்வுகளை
அறியாத அரக்கர்களா?
மானுட சாதிகள்,
நாங்கள் முன்னேறினால்
நீங்கள் போவீர்கள்
வெளியேறி,
எங்களுக்கோர் அடையாளத்தை
தந்ததே கல்வியெனும்
ஆயுதம்,
எட்டயபுரத்தானின்
ஏவலாக சமூகத்தை
எதிர்த்து நின்றேன் ,
எனக்கும் முடியுமென
சாதித்துக் காட்ட துணிந்தேன்,
சமத்துவம் பேசும்
சாணக்கியர்களை
பற்றி சிந்தித்தேன்,
வாய்பேச்சில் மட்டும்
வாழட்டுமென கொஞ்சம்
நிந்தித்தேன் ,
அர்த்தநாரியாகிய
ஆதிசிவனை
வணங்குபவர்களை
பார்த்து சிரித்தேன் ,
பாதையொன்று பிறக்க
மூளைக்கு வேலை கொடுத்தேன் ,
முடங்கி கிடந்த அறிவை
தட்டி எழுப்பினேன்,
குறியறுத்து குருதி வெள்ளத்தில் உறைந்து உருமாற்றியே ,
தரமற்ற உலகின் தரமான
சேர்க்கையென உணர்த்தவே ,
ஊக்கமும் உறுதியும்
தமிழும் தழைத்தோங்க
தரணியிலே,
ஏக்கத்திலே ,
தன்மானங்காக்க வேண்டுகிறோம்
இனியொரு பிறவி வேண்டாமென...!