Dilani Sridharan Poem: கைம்பெண்ணின் க(வி)தையிது!
Aug 04, 2026,01:42 PM IST
- டிலாணி ஸ்ரீதரன்
விதியென வீழ்ந்தான்
மணந்தவன் மண்ணுக்குள்ளே ,
சதியென்ன செய்தாள்
சமூகத்தின் பார்வையிலே,
மூதேவியென முணுமுணுப்பு
அயலவர்கள் வீடுகளிலே,
வீண்பழிகளும் விமர்சனங்களும்
வீதியில் நடக்கையிலே,
குமுறல்களில் குருதியும்
உறைந்துப் போகையிலே,
குற்றமென்ன செய்தேன்
குடியானேன் குடிசையினுள்ளே,
விடுதலையென வீராப்பாக
தாய்வீடு செல்லயிலே,
நல்லக்காரியமும் நடக்குது
எனக்கொரு அழைப்பில்லையே,
சித்தம் கலங்கியதே
பித்தும் பிடித்ததே,
இறந்தாரவர் விபத்திலே
விடப்பட்டேன் தெருவிலே,
புத்தனின் மொழிப்பேசும்
அற்பர்களையும் புறந்தள்ளியே,
பிள்ளைகளை வாழவைக்கவே
பிறப்பெடுத்தேன் வீரத்தாயாகவே.