Tamil Poem: மன(தின்)வலி
- டிலாணி ஸ்ரீதரன்
ஆறாத காயங்களும் அடுக்கடுக்காக வந்துசேரத் தீராத வேதனையில் உள்ளமும் நொறுங்குமே,
வாடாத முகமும்
வாட்டம் கொள்ள
தேடாத நிம்மதியை
தேடித்தேடி அலையுமே,
மண்டைக்கணம் வந்தபடி சிந்தனையில் மூழ்கிவிட
தொண்டைக்குழி விரைத்தப்படி
கண்ணீரும் பெருகுமே,
நெஞ்சத்து குமுறலும் வஞ்சகம் இல்லாது வாரிக் கொள்ள
தஞ்சத்துக்கு இடந்தேடி தறிகெட்ட மனமும்
அலையாய்த் துடிக்குமே,
புத்திக்கெட்டப் புலம்பலும் புதுராகம் இசைக்க
கத்தியும் வெட்டாமலே கழுத்தை அறுக்குமே,
தீர்வொன்று எடுக்கத் தனிமையில் தானிருக்க
பிறப்பொன்று ஏனெனத் தன்னைத்தானே
கேள்வி கேட்குமே,
மூர்க்கமான முடிவு மூளையைக் கசக்கிவிட
தர்க்கம் பண்ணாமலே தலையையும் கொய்யுமே,
வாளெடுத்து வீசிய வார்த்தைகள் எல்லாம் வாய்மொழியால் தானுரைக்கத்
தாழெடுத்து
எட்டிப்பார்க்குமே,
சொல்லில் அடங்காத வேதனைகளும் சோதனைகளாய் மாற
எண்ணிலடங்காத ஏக்கமும் ஏளனமாய் சிரிக்குமே,
பாசமுள்ள உறவுகளின் பாசாங்கு தெரிந்தப் பின்னே
வேசமும் வேகமாய் இதயத்தை பந்தாடிச் செல்லுமே,
வாராத நோய்களும் வந்தெம்மைத் தாக்கிடத் தீராத நட்பாய்
தீர்க்கமாய் நிற்குமே,
தேகத்தை உருக்கியே குருதியும் உறைந்திட
சோகத்தை மொழிந்திடத் தோழனையும் விழித்தேடுமே,
மனிதனாகப் பிறந்து
மாண்புடன் வாழும் புனிதத்தைக் கெடுக்க கொச்சைமொழியும் பிறக்குமே,
வலிகளும் மறக்க உறக்கத்தைத் தேட
விழிகளும் வீராப்பில்
இமைமூட மறுக்குமே.